சீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது

புதுடெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை சீன உளவுத்துறைக்கு கொடுத்து வந்த பத்திரிகையாளரும், அவருக்கு  உடந்தையாக இருந்த சீன பெண்ணும், அவருடைய கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் பகுதி நேர பத்திரிகையாளராக பணியாற்றி வருபவர் ராஜீவ் சர்மா. இவரிடம் சீன நாட்டு ெபண்ணும், நேபாளத்தை சேர்ந்த அவரது கூட்டாளியும், அணுகி இந்தியாவின் பாதுகாப்பு, ராணுவ ரகசியங்களை பற்றி சீன உளவுத்துறைக்கு கொடுத்தால் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை காட்டினர். இதற்கு மயங்கிய ராஜீவ் சர்மா, பத்திரிகையாளர் என்ற போர்வையை பயன்படுத்தி, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு சென்று ரகசியங்களை சேகரித்து, சீன உளவுத்துறைக்கு வழங்கி வந்தார்.

இது பற்றி டெல்லி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் துணை கண்காணிப்பாளர் சஞ்ஜீவ் குமார் யாதவ் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ராஜீவ் சர்மாவை கண்காணித்து வந்தனர். அதில் அவர் சீன உளவாளியாக செயல்படுவது உறுதியானது. இதையடுத்து, சீனப் பெண், அவருடைய நேபாள கூட்டாளி மற்றும் ராஜீவ் சர்மாவை நேற்று கைது செய்தனர். அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கிருந்து, பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது பற்றி 3 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: