சென்னையில் விடிய, விடிய மழை; நீலகிரி, கோவையில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை பெய்தது. தமிழகத்தில் நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், வடகடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயமுத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வடகடலோர தமிழகம், சென்னை மற்றும் புறகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய பகுதியில் 20ம் தேதி(இன்று) குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்புள்ளது. தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஓட்டிய மத்திய வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் இன்று பலத்த காற்றுவீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: