சென்னை: தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு கன்வீனர் மு.வரதராஜன், இணை கன்வீனர்கள் பாண்டியன், எம்.ஜி.கண்ணன், எஸ்.ராஜேந்திரன், டி.சிவாஜி, மல்லிகா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்திலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திலும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர். இதுவரை சுமார் 62000க்கும் அதிகமானவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதார ஓய்வூதியம் என்பது மிகமிக குறைவு.
வாழ்நாள் முழுவதும் சத்துணவு திட்டத்திற்கு அர்ப்பணித்த பணியாளர்கள் ஓய்வு பெற்ற நிலையில் வாழ்வாதாரம் ஓய்வூதியம் வாழ்க்கைக்கு, மருத்துவ செலவிற்கு போதாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு மனிதாபிமானத்துடன் பரிசீலித்து ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கிராம கடை நிலை ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதேபோல மருத்துவ காப்பீடும் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.