புதுடெல்லி: மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைபடி நாடு முழுவதும் நாளை மறுநாள் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை. தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள் ஒரே முடிவாக, மத்திய அரசு குறிப்பிட்ட தேதியில் பள்ளிகளை திறக்கும் முடிவை ஒத்திவைத்துள்ளன. கொரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை நாளை மறுநாள் (செப். 21) முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதாவது, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகளை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், இந்த அனுமதியை அனைத்து மாநிலங்களும் ஒரே மாதிரியாக பார்க்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு வேறுபடுவதைப் போலவே, பெற்றோரும் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதனால், நாளை மறுநாள் நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு என்பது, ஒத்திவைக்கப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து யோசிக்கவே முடியும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.