வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே எரியோட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக தங்கவேல் என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிப்பதாக எரியோடு பகுதி முழுவதும் நேற்று சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.
அதில், ‘தமிழக அரசே, கல்வித்துறை சேவைத்துறையா, கயவர்களின் வேட்டை துறையா என்றும், எரியோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கைக்கு 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.250, 9, 10ம் வகுப்புகளுக்கு ரூ.310, 11, 12ம் வகுப்புகளுக்கு ரூ.600 என கட்டணம் வசூல் செய்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுத்திடு, முறைகேடாக வசூலித்த பண்தை மாணவர்களிடம் ஒப்படைப்பு செய்திடு, முறைகேடாக செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கலைத்திடு என்றும், இவண் மாணவர்கள் பெற்றோர்கள் நல கூட்டமைப்பு- எரியோடு’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டர் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதறகிடையே பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் அமைப்பினர் சேர்ந்து எரியோடு போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளனர். அதில், ‘பள்ளியின் பெயரை கெடுக்கும் வகையில் செயல்படும் சுவரொட்டி அடித்தவர்கள், ஒட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.