சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணைந்து நடத்தும் Connect 2020 மாநாட்டில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் பங்கேற்றுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் நெறிமுறை சார்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்கையைான தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2020-ஐ வெளியிட்டார். இந்த கொள்கை இணைய பாதுகாப்பினை உறுதி செய்வதுடன், பாதுகாப்பு மீறல்களை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் வழிவகுக்கும். மேலும், ஆளுமை மற்றும் வளர்ச்சி சார்ந்த இலக்குகளை தமிழ்நாடு எளிதாக எய்திட இயலும்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கொரோனாவை வெல்ல தமிழக அரசு தீவிரமாக பணியாற்றி வருகிறது. புதுமை மற்றும் அறிவின் தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. கொரோனா காலத்திலும் தமிழக அரசு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. சர்வதேச தொழில் நுட்ப மையமாக தமிழத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள் பயணத்தின்போது தொழில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.