×

நெல்லை மாவட்ட கால்வாய்களில் காலம் கடந்து தண்ணீர் திறந்ததால் நடுவை தொடங்காத விவசாயிகள்

நெல்லை : நெல்லை மாவட்ட கால்வாய்களில் காலம் கடந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் பெரும்பாலான விவசாயிகள் நடுவை பணியை தொடங்க தயங்குகின்றனர். இதனால் நிலங்கள் காய்ந்து மைதானம்போல் காட்சி அளிக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, வழக்கம்போல் பெய்யவில்லை. இதனால் பிரதான அணைகளிலும் போதுமான அளவு தண்ணீர் இருப்பில் இல்லாததால், ஜூன் 1ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

விவசாயிகள் நடுவையை மேற்கொள்ள தயார் நிலையில், அணைகளில் இருந்து தண்ணீர் திறப்புக்காக காத்திருந்தனர்.  ஆனால் ஜூலை மாதமும் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், 2 மாதங்கள் கடந்து காலதாமதமாக பாபநாசம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதுவும் குறிப்பிட்ட கால்வாய்களுக்கு மட்டும் தண்ணீர் வந்தது. இந்தாண்டு கால்வாய்கள் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே தண்ணீர் செல்வதில் தடையும் ஏற்பட்டது. இருப்பினும் சில குளங்களுக்கு தண்ணீர் வந்துள்ளது.

ஆனாலும் நெல் நடவுப்பணிகளை பெரும்பாலான விவசாயிகள் தொடங்கவில்லை. வாழை போன்ற பிற பயிர்களுக்கு இந்த தண்ணீர் பயன்பட்டாலும் நெல் நடவு முழுமையாக நடைபெறாததால் பெரும்பாலான நிலங்கள், இப்போதும் மைதானம்போல் காய்ந்து காட்சி அளிக்கின்றன. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், காலத்தே பயிர் செய் என்பதை பின்பற்றாவிட்டால் நஷ்டம் ஏற்படுவது இயற்கை. ஜூன் 1ம் தேதி தண்ணீர் திறந்தால்தான் நாற்று நட்டு பயிரை குறிப்பிட்ட நாட்களில் வளர்த்து அக்டோபர், நவம்பர் மழை சீசனுக்கு முன்னதாக பாதகமின்றி அறுவடை செய்ய முடியும். ஆனால் இம்முறை மிகவும் தாமதமாக திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி பயிர் செய்தால் அறுவடைக்கு மழை காலத்தை கடந்துவிடும். அதன் பின்னர் அடுத்த பயிர் சாகுபடி ெசய்ய முடியாது. இதனால்தான் பல விவசாயிகள் தயக்கத்தில் உள்ளனர், என்றனர்.

Tags : canals ,district ,Nellai , Tirunelveli, Water, Farmers, Didnt Agriculture
× RELATED மணிமுத்தாறு அருவியில் நாளை முதல்...