மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டணம் வடபத்ரகாளியம்மன் கோயிலின் பின்பகுதியில் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் இளைஞர்கள் மது அருந்துவது போன்ற வீடியோ வாட்சப்களில் வைரலானது. அந்த வீடியோவில், 6 அடி நீளமுள்ள பாம்பை துண்டு துண்டாக 2 வாலிபர்கள் வெட்டுகின்றனர். அதனை சமைத்து சாப்பிட, ஒரு கிலோ கடலை மாவு வாங்கி வரும்படி, மற்றொரு வாலிபரிடம் கூறுகிறார். தோல் உரிக்கப்பட்டு, குடல் நீக்கி மீனை வெட்டுவது போல், பாம்பை துண்டு துண்டாக வெட்டி எடுக்கின்றனர். பிறகு, ஒரு பாத்திரத்தில் மசாலா தடவி வறுத்து எடுத்து, வாழை இலையில் பரப்பி வைத்துள்ளனர். அதனை மது குடித்துக் கொண்டே வாலிபர்கள் ருசிக்கின்றனர். இதுபற்றி மேட்டூர் வனத்துறையினர், தங்கமாபுரிபட்டணம் சென்று விசாரணை நடத்தினர். அதில், சுரேஷ் (32), முகமது உசேன் (22), ஜெயா (23) எனத்தெரியவந்தது. அந்த 3 பேரையும் நேற்று மாலை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.