மேட்டூர் அருகே பாம்பை துண்டு, துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்ட வாலிபர்கள்: வைரலாகும் வீடியோ; 3 பேர் கைது

மேட்டூர்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தங்கமாபுரிபட்டணம் வடபத்ரகாளியம்மன் கோயிலின் பின்பகுதியில் காலியிடம் உள்ளது. இந்த இடத்தில் இளைஞர்கள் மது அருந்துவது போன்ற வீடியோ வாட்சப்களில் வைரலானது. அந்த வீடியோவில், 6 அடி நீளமுள்ள பாம்பை துண்டு துண்டாக 2 வாலிபர்கள் வெட்டுகின்றனர். அதனை சமைத்து சாப்பிட, ஒரு கிலோ கடலை மாவு வாங்கி வரும்படி, மற்றொரு வாலிபரிடம் கூறுகிறார். தோல் உரிக்கப்பட்டு, குடல் நீக்கி மீனை வெட்டுவது போல், பாம்பை துண்டு துண்டாக வெட்டி எடுக்கின்றனர். பிறகு, ஒரு பாத்திரத்தில் மசாலா தடவி வறுத்து எடுத்து, வாழை இலையில் பரப்பி வைத்துள்ளனர். அதனை மது குடித்துக் கொண்டே வாலிபர்கள் ருசிக்கின்றனர். இதுபற்றி மேட்டூர் வனத்துறையினர், தங்கமாபுரிபட்டணம் சென்று விசாரணை நடத்தினர். அதில், சுரேஷ் (32), முகமது உசேன் (22),  ஜெயா (23) எனத்தெரியவந்தது. அந்த 3 பேரையும் நேற்று மாலை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நேற்று முன்தினம் அங்குள்ள சிவக்குமார் என்பவரது வீட்டினுள் சாரைப்பாம்பு புகுந்துள்ளது. அதனை சுரேஷ் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து பிடித்துள்ளனர். பின்னர், சாரைப்பாம்பை கொன்று, மீனை போல் துண்டு துண்டாக வெட்டி மசாலா தடவி எண்ணெய்யில் போட்டு வறுத்தெடுத்துள்ளனர். பிறகு மது குடிக்க, சைடிஷ்சாக சாப்பிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேர் மீதும், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.இதுபற்றி மாவட்ட வன அலுவலர் முருகனிடம் கேட்டபோது, ‘‘சாரைப்பாம்பை வெட்டி சமைத்த சம்பவத்தில் 3 வாலிபர்களை கைது செய்துள்ளோம். அவர்கள் மீது வழக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’’ என்றார்.

Related Stories: