நீதிமன்றம் குறித்து சர்ச்சை கருத்து சூர்யா மீது அவமதிப்பு வழக்கு தேவையில்லை: தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில், சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவையில்லை என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட்  தற்கொலை குறித்து சூர்யா தெரிவித்த கருத்து நீதிபதிகளையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது எனக்கூறி சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதினார்.இதையடுத்து சூர்யாவுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் 6 பேர் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதுதொடர்பாக, சூர்யா மீது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமா என்பது குறித்து அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணிடம் கருத்து கேட்டது. ஆனால் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கு தொடர தேவையில்லை என தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தலைமை நீதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்தார்.

தொடர்ந்து, இதுதொடர்பாக தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில், இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என அரசின் தலைமை வழக்கறிஞர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். எனவே நீட் தேர்வு தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அதேநேரம், கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் நீதிமன்றமும், நீதிபதிகளும், நீதித்துறை ஊழியர்களும்,  அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியுள்ளதை கண்டிப்பாக பதிவு செய்ய விரும்புகிறோம். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீதித்துறையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் படிப்படியாக நேரடி விசாரணை முறை அமல்படுத்தப்பட்டது.

கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஆக.31 வரை கீழமை நீதிமன்றங்களில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து  509 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதில் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 346 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் புதிய  நீதிமன்றங்களும் திறக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த காலகட்டத்தில் 25 ஆயிரத்து 181 வழக்குகளுக்கும், மதுரை கிளையில் 17 ஆயிரத்து 52 வழக்குகளுக்கும் என மொத்தம் 42 ஆயிரத்து 233 வழக்குகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் பாதிக்காத வகையில் எழும் நியாயமான விமர்சனங்களை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்றாலும், கொரோனா காலகட்டத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் என்ன என்பதை முழுமையாக அறிந்து கொள்ளாமல் நடிகர் சூர்யா நீதித்துறையை விமர்சித்து இருப்பது அவசியமில்லாத ஒன்று. நடிகர் சூர்யா பொது விஷயங்களில் கருத்து தெரிவிக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக, உண்மை நிலவரம் அறியாமல் நீதிமன்றத்தையோ அல்லது நீதிபதிகளையோ அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது. நீட் தேர்வுக்கும், அதுதொடர்பாக நடைபெறும் சம்பவங்களுக்கும், நீதித்துறைக்கும் சம்பந்தம் இல்லை.

பொது தளங்களில் கருத்து தெரிவிக்கும் தனிநபர்கள் தகவல்களை சரிபார்த்து ஆராய்ந்த பிறகே பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தவறான கேள்விகளுக்கு இடம் கொடுத்து விடுவதுடன் தேவையற்ற விபரீதங்களையும் ஏற்படுத்தி விடும். அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள பேச்சு சுதந்திரம் என்பது நியாயமான விமர்சனத்தையும் உள்ளடக்கியதுதான். வார்த்தைகள் தரும் பொருளை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

 மக்கள் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றங்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் போது அது அவமதிப்பாக மாறாத வகையில் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும். சமூகத்துக்கு பல்வேறு பங்களிப்பை செய்துவரும் சுயநேர்மை உடையவர்கள், மற்றவர்களின் பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளும் பணிவு உடையவர்களாக இருக்க வேண்டும் என கூறிய நீதிபதிகள், கொரோனாவை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிற்க கிடைத்த வாய்ப்பாக கருதாமல், ஒருவரோடு ஒருவர் உடன் நிற்பதற்கான வாய்ப்பாக கருத வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: