×

கற்பூரம் பற்றித் தெரியுமா?

நன்றி குங்குமம் தோழி

இன்று பலரும் சளி பிடித்திருக்கும் போது பயன்படுத்தும் தைல வகைகளில் முக்கியப் பொருளாக இந்த கற்பூரம்தான் சேர்க்கப்படுகிறது.  அதற்கு முக்கிய காரணம் அதன் நறுமணம் மற்றும் அதன் மருத்துவப் பண்புகளும்தான். பழங்காலத்தில் நாட்டு மருத்துவத்தில் கற்பூரம் பல  பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
நன்மைகளும் பயன்களும்

கற்பூரம் சளியைப் போக்கும் அற்புத குணம் படைத்தது. சளித் தொல்லையில் இருந்து நல்ல நிவாரணம் அளிக்கும். இது நெஞ்சு சளியை  இளகச் செய்து, சளியை வெளியேற்ற உதவியாக இருக்கிறது.உதடுகளில் புண் வந்தால், அது நாம் உணவு உட்கொள்ளும் போது,  கடுமையான வலி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். இவற்றை விரைவாக சரி செய்ய கற்பூரம் உதவுகிறது.கற்பூர எண்ணெய் முகத்தில்  உள்ள பருக்களைப் போக்க உதவுகிறது. குறிப்பாக, சருமத்தில் உள்ள தழும்புகளை மறைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது.

மூக்கு அடைப்பில் இருந்து உடனடி நிவாரணத்தை கற்பூரம் அளிக்கிறது.பேன் தொல்லை நீங்க,  கற்பூரத்தை தேங்காய் எண்ணெயுடன்  சேர்த்து கலந்து, தலைக்கு தடவி வந்தால், நல்ல பயன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் பேன்களை நகர விடாமல் தடுக்கும். கற்பூரமோ  பேன்களை அழித்து விடும்.தசை வலிகளுக்கும் கற்பூரம் நல்ல சிகிச்சை அளிக்கிறது. இதற்கு கற்பூரத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள்  தான் காரணம். அதற்கு கற்பூரத்தை அத்தியாவசிய எண்ணெய்களுடன் சேர்த்து கலந்து வலியுள்ள இடத்தில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம்  சீராகி தசைகளில் ஏற்பட்ட பிடிப்புகள் நீங்கி விரைவில் குணமாகும்.

குதிகாலில் வெடிப்பு இருந்தால், அதனை நீக்கும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. மேலும் வெடிப்புக்களால் ஏற்படும் வலியைக் குறைத்து  வெடிப்புக்களை விரைவில் சரி செய்தும் விடும்.கால்களில் ஆணி இருந்தால் சாதாரணமாக நடப்பது சற்று கடினம். இதனால் மிகுந்த  கஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். இதனை சரி செய்ய கற்பூர எண்ணெய் பெரிதும் உதவியாக இருக்கும்.கற்பூர எண்ணெய் ஓர் இயற்கைப்  பூச்சிக்கொல்லி யாக செயல்படுகிறது. இதனை வீடுகளில் பயன்படுத்தும் போது பூச்சிகள் மற்றும் கொசுக்கள் வராமல் தடுக்கிறது.

- கவிதா சரவணன், திருச்சி

Tags :
× RELATED தமிழகத்தின் முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞர்!