சென்னை,: இந்திய பிபிஓ முன்னேற்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதற்காக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, சட்டம் மற்றும் நீதி துறையின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், இந்திய பிபிஓ முன்னேற்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் உள்ள இரண்டாம் பிரிவு மற்றும் மூன்றாம் பிரிவு நகரங்களில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும், பிபிஓ மற்றும் தொழிற்சாலைகளில் தகவல் தொழில் நுட்ப சேவைகளை செயல்படுத்தவும் கூடிய இந்திய பிபிஓ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதற்காக நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்தின் மூலம், 48 ஆயிரத்து 300 இடங்களை நிரப்புவதற்கான நீடித்த மற்றும் நிலையான நிதியாக ரூ.493 கோடி நாட்டுக்கு கிடைக்கும்.
இந்தியாவை பொருத்தவரையில் சென்னை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்திய மென்பொருள் பூங்காக்கள் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் 7 ஆயிரத்து 705 இடங்கள் பிபிஓக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரத்து 605 இடங்கள் தமிழ்நாட்டுக்காகவும், 100 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8 ஆயிரத்து 387 நேரடி வேலை வாய்ப்புகளையும், 16 ஆயிரத்து 774 மறைமுக வேலைவாய்ப்புகளையும் பொதுமக்கள் பெற்றுள்ளனர். இந்த திட்டத்தின் வெற்றி சதவீதம் என்று பார்த்தால் 93 சதவீத வெற்றியை பெற்றுள்ளோம்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 51 பிபிஓக்கள் 13 இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏக காலத்தில் ஊரகப் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். தமிழகத்தில் இந்த திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்துக்கு 10 ஆயிரம் இடங்களை இந்திய பிபிஓ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒதுக்க வேண்டும் என்று தமிழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.