சென்னை: மக்களவையில் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றி உள்ள மத்திய பாஜக அரசுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். வேளாண்துறை சார்ந்த மசோதாக்களை நிறைவேற்றும் முன் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசிக்கவில்லை. வேளாண் மசோதாக்களை பாஜக அரசு நிறைவேற்றி இருப்பது மாநில உரிமைகள், கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு குவிண்டால் நெல்லை ரூ.850க்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1,150 என்று அரசு நிர்ணயித்துள்ளது. ஆதரவு விலை ரூ.1,150ஆக உள்ளபோது, வியாபாரிகளுக்கு ரூ.850க்கு விற்கும் நிலை விவசாயிகளுக்கு ஏன் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு விளக்கம் தருமா என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சுருங்கிப் போன இந்திய பொருளாதார வளர்ச்சி, உடனடியாக மீண்டெழ வாய்ப்பு இல்லை என்பதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெளிவுப்படுத்தி உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் வி-வடிவில் வளர்ச்சி அடையும் என்றும், அதே நேரத்தில் இந்த வளர்ச்சி நீண்ட கால அளவில் படிப்படியாகவும் இருக்கும் என சக்திகாந்த தாஸ் கூறியதை ப.சிதம்பரம் மேற்கோள்காட்டி, தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரைப் போலவே, ஒவ்வொரு நேர்காணலிலும், பொது நிகழ்வுகளிலும் வி வடிவ பொருளாதார வளர்ச்சி கோட்பாட்டை தலைமை பொருளாதார ஆலோசகர் சந்தைப்படுத்தி வருவதாகவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.