முதியவரை கொன்று நகை, பணம் கொள்ளையில் 3 வாலிபர்கள் சுற்றி வளைத்து கைது: சென்னை புறநகரில் கைவரிசை காட்டியது அம்பலம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் அருகே முதியவரை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த 3 வாலிபர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சென்னை கேளம்பாக்கம் - வண்டலூர் சாலை, வேங்கடமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (72). கட்டுமான பணிகளுக்கான பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். கடந்த ஜூலை 22ம் தேதி வேல்முருகன், கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து 3.5 லட்சம், 7 சவரன் நகைகள் கொள்ளை போனது.

இதுதொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கல்பாக்கம் அருகே உய்யாலிக்குப்பத்தை சேர்ந்த ராஜா (23), திருக்கழுக்குன்றம் அருகே பூந்தண்டலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (28), அயப்பாக்கத்தை சேர்ந்த விஜய் (26) ஆகியோர் வேல்முருகனை கொலை செய்தது தெரிந்தது.

 இதையடுத்து போலீசார், 3 பேரையும் நேற்று முன்தினம் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்தனர். அதில்,வேல்முருகன் வீட்டில் கொள்ளையடித்தபோது, தங்களை தடுத்து தாக்கியதால், அவரை இரும்பு ராடால் அடித்து கொலை செய்ததை வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதேபோல், கடந்த ஜூலை 13ம் தேதி திருப்போரூர் அருகே தண்டலம் கிராமத்தில் புலியூர் கிராமத்தை சேர்ந்த அமுதா (38) என்பவரிடம் 3 சவரன் நகை பறித்தனர்.கல்பாக்கம் எஸ்பிஐ வங்கி காசாளர் நந்தகோபால் வீட்டில் கார், 7 சவரன் நகை, எல்இடி டிவி கொள்ளையடித்துள்ளனர்.

தாழம்பூர் பகுதியில் குழந்தையுடன் நடந்து சென்ற இளம்பெண்ணை தாக்கி ஒன்றரை சவரன் நகை, திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலம் சந்திப்பில் 3 சவரன் வழிப்பறி, கல்பாக்கத்தில் ஒரு ஆட்டோவை திருடி வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் விற்றது என பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், 3 பேரையும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: