கோடம்பாக்கம் மாநகராட்சி மைதானத்தில் பிளம்பர் கழுத்தறுத்து கொலை: நண்பர்களுக்கு வலை

சென்னை: கோடம்பாக்கம் மாநகராட்சி மைதானத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் பிளம்பரை சக நண்பர்களே கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சூளைமேடு பெரியார் பாதை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (33), பிளம்பர். தினசரி வேலை முடிந்ததும் அந்தோணி தனது நண்பர்களான ஐயப்பன் மற்றும் சிலருடன் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 10வது கிராஸ் தெருவில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நண்பன் ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேருடன் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.  அப்போது, அந்தோணி போதையில் ஐயப்பனை தகாத வார்த்தையால் திட்டியதால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் அந்தோணி, ஐயப்பனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் மறைத்து வைத்திருந்த கத்தியால் நண்பர்களுடன் சேர்ந்து அந்தோணியை கழுத்தை அறுத்ததுடன், வயிறு பகுதியில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் அந்தோணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதையடுத்து ஐயப்பன்  நண்பர்கள் 3 பேருடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், கோடம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்தோணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஐயப்பன் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: