சென்னை: தெற்கு ரயில்வே டெக்னீசியன் நியமனங்களில் 2556 பேரில் 1686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார். ரயில்வே டெக்னீசியன் பணிக்கு 2018ம் ஆண்டு பணி நியமன அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்வு பெற்றுள்ளவர்கள் பற்றிய விவரங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரியிருந்தார். அதற்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் டெக்னீசியன் பதவிக்கான தேர்வில் மொத்தம் 2,550 பேரில் இந்தியில் எழுதி தேர்வு பெற்றவர்கள் 1,686 பேர் என்றும் தமிழில் எழுதியவர்கள் 139 பேர் எனவும், மலையாளத்தில் எழுதியவர்கள் 221 பேர் என்றும் பதில் அளித்துள்ளார்.