காஞ்சிபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த பிப்ரவரி 23 முதல் 26ம் தேதி வரை டெல்லியில் போராட்டம் நடந்தது. திடீரென கலவரமாக மாறிய அந்த போராட்டத்தில் 53 பேர் பலியானார்கள். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக டெல்லி போலீசார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயரை துணை குற்றப் பத்திரிகையில் சேர்த்துள்ளனர். இதை கண்டித்து, காஞ்சிபுரம் பெரியார் நினைவுத்தூண் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் நகரக்குழு உறுப்பினர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சங்கர், நிர்வாகிகள் பாஸ்கரன், சௌந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.