சென்னை : கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கம் நிலவுகிறது.தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.4,993-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.39,944க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டிருந்த நிலையில், படிப்படியாக குறைந்து 40 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது பெண்களுக்கு ஆறுதல் தந்துள்ளது.
