×

சொந்த இடம் பறிபோனதாக கூறி நெல்லையில் குடிநீர் டேங்க்கில் ஏறி மெக்கானிக் தற்கொலை மிரட்டல்

உயிரை பணயம் வைத்து மடக்கி பிடித்த தீயணைப்புத் துறையினர்

நெல்லை:  சொந்த  இடத்தை மாநகராட்சி எடுத்துக் கொண்டதாக கூறி நெல்லையில் குடிநீர் டேங்க்கில்  ஏறி தற்கொலை செய்யப் போவதாக ஒரு  மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம்  நடத்தியவரை உயிரையும் பொருட்படுத்தாமல் தீயணைப்புத் துறையினர் மடக்கிப்  பிடித்தனர். நெல்லை  மேலப்பாளையம், கணேசபுரம் வடக்குத் தெருவை  சேர்ந்தவர் கணேசன்(46). ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி, இரு பெண்  குழந்தைகள். தற்போது  சென்னையில் உள்ளனர். இவருக்கு சொந்தமான 50 சென்ட் இடம்  சேவியர் காலனியில் இருந்தது. அந்த இடத்தை மாநகராட்சி லே அவுட் அப்ரூவல்   அடிப்படையில் குடிநீர் டேங்க் கட்ட எடுத்துக் கொண்டதாக கூறி வந்தார்.

இதுதொடர்பாக  அவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்தார். வழக்கில் தீர்ப்பு வந்த பிறகும்  அவரது இடத்தை திரும்பத் தர அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்கவில்லை. எனவே, தனது இடத்தை தரக் கேட்டு கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு  போராட்டம், உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். எந்த  நடவடிக்கையும் இல்லாததால், சுதந்திர தினமான நேற்று காலை 6.30 மணிக்கு நெல்லை புதிய  பேருந்து நிலையம் அருகில் உள்ள சேவியர் காலனி  குடிநீர் மேல்நிலை  நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறிய கணேசன், எனது நிலத்துக்கு தீர்வு இல்லாததால்  தற்கொலை செய்யப் போவதாகக் கூறினார்.
இதுகுறித்து, டேங்க்  ஆபரேட்டர் பாளை. தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ  இடத்திற்கு வந்த பாளை. தீயணைப்புதுறையினர்  மற்றும் போலீசார், டேங்கின் மீது ஏறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர்  திடீரென டேங்கிலிருந்து கீழே குதிக்க முயற்சித்தார். கையில் ஒரு சிறிய  பாட்டிலில் பெட்ரோலும் நிரப்பி வைத்திருந்தார். அப்போது லாவகமாக  செயல்பட்ட தீயணைப்பு  வீரர்கள் 8 பேர் கணேசனை மடக்கிப் பிடித்தனர்.  வீரர்கள் மடக்கிப் பிடித்ததில் பெட்ரோல் கீழே சிதறி கொட்டியது. தங்களது  உயிரையும் பொருட்படுத்தாமல் தற்கொலை செய்யும் நோக்கில் கீழே  குதிக்க முயன்ற  கணேசனை தீயணைப்பு அலுவலர்கள் மடக்கிப்பிடித்து மேலப்பாளையம் போலீசாரிடம்  ஒப்படைத்தனர்.

சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, இந்த தற்கொலை மிரட்டல் போராட்டத்தால் நெல்லை புதிய பஸ் ஸ்டாண்ட்  பகுதியில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை ஒன்றரை மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : suicide ,Nellai , Rice, drinking water tank, mechanic, suicide, intimidation
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை