×

74வது சுதந்திர தினவிழா அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார்

சென்னை: 74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்பு  வழங்கினார். 74வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளர்  கே.என்.நேரு, திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன்,  பி.கே.சேகர் பாபு, மாதவரம் சுதர்சனம், சிற்றரசு, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், பூச்சி முருகன், பகுதி செயலாளர் மா.பா.அன்புத்துரை உள்ளிட்ட  திமுக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய நாட்டின் 74வது சுதந்திர தினத்தை  முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜனநாயகம்,  மதச்சார்பின்மை, பன்முகத்தன்மை, சமூகநீதி, கூட்டாட்சித் தத்துவம் உள்ளிட்ட அடிப்படை அம்சங்களை முத்துக்களாக கோர்த்துக் கொடுத்துள்ள  அரசியல் சட்டத்தை நமக்கு அளித்துள்ள இந்த சுதந்திரத்தைப் பெற்றுந் தந்த தியாகிகளின் தியாகங்களை இந்நாளில் எண்ணிப் பார்ப்போம்.
சுதந்திரப் போராட்டத்தில் எண்ணற்றோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்ததும், அவர்களின் அறவழிப்போராட்டமும்; எல்லாத் தலைமுறையினரும்  மனதில் நிலைநிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கருவூலமாகும்.

பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஆறு அடிப்படை உரிமைகள் கிடைக்கப் போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம்  என்றைக்கும் நன்றிக்கடன் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். இந்த மதிப்புமிக்க-தன்னலமற்ற தேசப்பணியில் - தமிழர்களின் பங்களிப்பு, எண்ணி  எண்ணி இன்றும்  வியக்கத்தக்கது;  14 முறை தமிழகத்துக்கு வந்த காந்தியடிகளுக்கு விடுதலை இயக்கத்துக்கான போர் முறைகளை வகுப்பதில்  தமிழகம் ஒரு களமாகப் பயன்பட்டிருக்கிறது” - என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆற்றிய சுதந்திர தின உரைக்கு ஏற்றாற் போல், திமுக  ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரங்களில் எல்லாம், சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கும், அவர்களது வாரிசுகளுக்குமான “தியாகிகள் பென்ஷன்”  உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து - அவற்றைச் செயல்படுத்தியும் காட்டியவர்.

ஆகவே இந்தச் சுதந்திர தினத்தில், “சாதி, மத, இன வேறுபாடுகளை” அறவே தூக்கியெறிந்து - “சகோதரத்துவம், சமத்துவம்” என்ற பாச உணர்வோடு  அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக - அரசியல் சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் - நாட்டின் பன்முகத்தன்மையையும்  போற்றிப் பாதுகாத்திட நாம் அனைவரும் உள்ள உறுதியுடன் சபதம் ஏற்போம்!. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Anna Aruvalaya ,MK Stalin ,Independence Day , 74th Independence Day, Anna Arivalayam, MK Stalin, National Flag
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...