நாகர்கோவில்: நாகர்கோவிலில் கூலிப்படை ஏவி கணவரை கொல்ல முயன்ற சம்பவத்தில் இளம்பெண்ணின் பல ரகசிய திட்டங்கள் அம்பலமாகி உள்ளன. நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (38). போட்டோகிராபர். இவரது மனைவி காயத்ரி (35). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகின்றன. காயத்ரிக்கும், நாகர்கோவிலில் ஜெராக்ஸ் சென்டர் மற்றும் பிளே ஸ்கூல் நடத்தி வந்த யாசின் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது. கள்ளக்காதலனுக்காக கணவரின் பெயரில் உள்ள வீட்டை ரூ.10 லட்சத்துக்கு அடமானம் வைத்து காயத்ரி கொடுத்துள்ளார். ஆனால் கணவரிடம், தனது அண்ணனுக்கு கொடுத்ததாக காயத்ரி தெரிவித்து இருக்கிறார். வீட்டு பத்திரம் மீட்கப்படாமல் இருந்ததால், தனது மனைவி காயத்ரியிடம் இது குறித்து கேட்க அவர்களுக்குள் தகராறு வெடித்தது.
இனியும் தாமதம் செய்தால், கள்ளக்காதல் விவகாரம் வெளியாகி விடும் என்பதால், கணேசை தீர்த்து கட்ட காயத்ரியும், கள்ளக்காதலன் யாசினும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 4ம் தேதி கணவர் தூங்கிய பின், நள்ளிரவில் கூலிப்படையை காயத்ரி வரவழைத்தார். அவ்வாறு வந்த 2 பேர், படுக்கையில் தூங்கி ெகாண்டு இருந்த கணேசை சுத்தியலால் தலை, இடுப்பு பகுதியில் சரமாரி தாக்கி விட்டு தப்பினர். இதில் கணேஷ் இறந்து விட்டார் என நினைத்து காயத்ரி லைட்டை போட்டு பார்த்த போது அவர் சாகாமல் துடிதுடித்துக் கொண்டு இருந்தார். அதற்குள் பொழுது விடிந்ததால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில் மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்கியதுபோல் காயத்ரி கூச்சலிட்டு நாடகமாடினார். தற்போது, மருத்துவமனையில் கணேஷ் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இதுதொடர்பாக வடசேரி போலீசார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து காயத்ரி மற்றும் கூலிப்படை விஜயகுமார், கருணாகரனை கைது செய்து யாசினை தேடி வருகிறார்கள். தொடர் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. கணேஷ், 50 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துள்ளார். சமீபத்தில் நிலம் விற்பனை தொடர்பாக அவருக்கு பணம் வந்ததாகவும் தெரிகிறது. வீடு மற்றும் இந்த பணத்தின் மதிப்பு எல்லாம் சேர்த்து ஒன்றரை கோடி வரை இருக்கும். இவை எல்லாம் காயத்ரிக்கு நன்றாக தெரியும். எனவே கணவரை கொலை செய்தால் இன்சூரன்ஸ் பணம் மற்றும் சொத்து வைத்து ஜாலியாக இருக்கலாம் என்று கள்ளக்காதலனுடன் இணைந்து கொலை திட்டத்தை வகுத்துள்ளார். ஆனால் கணேஷ் சாகாமல் உயிர் பிழைத்ததால் இவர்களின் திட்டம் தவிடு பொடியானது தெரிய வந்தது.