×

டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு ஏற்படாதவரை பள்ளிகள் திறக்கப்படாது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி அரசு சார்பில் இன்று 74வது சுதந்திரதின விழா இன்று தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்பட்டது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திரதின விழாவில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், கடந்த இரு மாதங்களோடு ஒப்பிடுகையில் டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த மத்திய அரசு, அரசு துறைகள், கொரோனா போர் வீரர்கள் பல்வேறு அமைப்புகள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

கொரோனாவில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்பும் சுவாசிப்பதில் பெரும் சிரமம் இருப்பதாக பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் அடுத்த வாரத்திலிருந்து ஆக்ஸிஜன் அளிக்கும் திட்டத்தை கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு செயல்படுத்த இருக்கிறோம். ஆம் ஆத்மி அரசைப் பொறுத்தவரை பள்ளிக் குழந்தைகளின் உடல்நலன், பாதுகாப்பு மிகவும் முக்கியம். நான் சந்தித்த பலரும் என்னிடம் தற்போதுள்ள சூழலில் பள்ளிகளைத் திறக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்கள். நான் அனைவருக்கும் உறுதியளிப்பது என்னவென்றால், டெல்லியில் கொரோனா தாக்கம் குறைந்து முழுமையான மனநிறைவு அடையாதவரை பள்ளிகள் திறக்கப்படாது.

கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், பிளாஸ்மா தெரபி சிகிச்சை இரு முறையையும் டெல்லி அரசு தான் கொண்டு வந்தது. டெல்லியில் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் கொண்டு வருவது சவாலானது. ஆனால், டெல்லி மக்கள் ஆதரவுடன் மீண்டும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு வரும் என நம்புகிறேன். அதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஜூன் மாதம் டெல்லியில் கொரோனா தாக்கத்தைப் பார்த்த மக்கள் டெல்லியைவிட்டு சென்றுவிடலாம் என்று அச்சப்பட்டனர். ஆனால் இப்போது அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது, நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. டெல்லியின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேலைவாய்ப்பு உருவாக்குதல், வாட் வரி குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை ரூ.8 வரை குறைப்பு போன்றவற்றை செய்து பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தி வருகிறோம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார்.



Tags : Schools ,Delhi ,Arvind Kejriwal ,Corona , Delhi, Corona
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...