சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏர் ஏசியா நிறுவனம் ஆயுதப்படை வீரர்களுக்கு ரெட் பாஸ் எனப்படும் சிறப்பு சலுகை அறிவிப்பு

டெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏர் ஏசியா விமான நிறுவனம் ஆயுதப்படை வீரர்களுக்கு ரெட் பாஸ் எனப்படும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா உள்பட பல நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக விமானத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களும் சம்பளம் குறைப்பு, ஊதியமின்றி விடுப்பு மற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் போன்ற செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இந்நிலையில் ஏர் ஏசியா நிறுவனம் ஆயுதப்படை வீரர்களுக்கு ரெட் பாஸ் எனும் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இதன்படி இந்த வாய்ப்பை இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை, துணை ராணுவப் படையினர் உள்ளிட்டோர் பெறலாம்.

இதற்காக விமான நிறுவனத்தில் 50 ஆயிரம் இடங்கள் வரையில் அடிப்படை கட்டணங்கள் எதுவும் இல்லாமல் வழங்கப்படும். ரெட் பாஸ் திட்டத்தின் படி அடிப்படை கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். அதே நேரத்தில் விமான நிலைய கட்டணம், வரி உள்ளிட்டவை வசூலிக்கப்படும். செப்டம்பர் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான ஒரு வழி பயண காலத்திற்காக அவர்கள் இன்று முதல் வரும் 21ம் தேதி வரையில் முன்பதிவு செய்து கொள்ள விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியான விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஏர் ஏசியா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: