விபத்து நேர்ந்த கரிப்பூர் விமான நிலையத்தை உடனடியாக மூட வேண்டும்..: கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்!

திருவனந்தபுரம்: விபத்து நேர்ந்த கரிப்பூர் விமான நிலையத்தை உடனடியாக மூடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ம் தேதி, வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயிலிருந்து 191 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில், தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டாக பிளந்து சிதைந்தது. விமானத்தில் பயணித்தவர்களில், 2 விமானிகள், குழந்தை உட்பட 18 பலியாகினர், பலர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணம் அதீத நம்பிக்கையில் விமானி சுயமாக முடிவெடுத்து தவறான ஓடு பாதையில் இறங்கியது தான் என கருப்பு பெட்டியின் மூலம் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, பருவமழை காலங்களில் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரையிறங்க தடை விதித்து, சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் உத்தரவிட்டது.  

இந்த விமான விபத்து பற்றி விசாரணை நடத்த கேப்டன் எஸ்.எஸ்.சஹார் தலைமையில் நான்கு நிபுணர்கள் உள்ள விசாரணைக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும் ஐந்து மாதத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து ஏற்பட்ட கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூடக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கறிஞர் யஷ்வந்த் ஷெனாய் தாக்கல் செய்த மனுவில், விமான விபத்து குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற திறந்த விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட விட வேண்டும், என கூறப்பட்டுள்ளது. விமானம் இரண்டாக உடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிழைகள் சரி செய்யப்படும் வரை விமான நிலையத்தை மூட வேண்டும் என்றும், கட்டுமான குறைபாடுகளை சரிபார்க்கவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: