சென்னை: விரைவில் கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கும் என உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியாளர் சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார். உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. இன்னும் சில மாதங்களில் கொரோனா தடுப்பூசி பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் மூன்று வித கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன.
இதற்கிடையில், தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்று 19 நிபுணர்கள் அடங்கிய மருத்துவக்குழுவை அமைத்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று நடவடிக்கை குறித்து பல்வேறு ஆலோசனைகளை இந்தக்குழு வழங்கி வருகிறது. இக்குழுவிற்கு ஆலோசனை அளிப்பதில் குழுவில் இல்லாத உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் மருத்துவர் சௌமியா சாமிநாதன் பெரிதும் உதவி வருகிறார். அமெரிக்காவிலிருந்து பலமுறை காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சௌமியா சாமிநாதன் ஆலோசனை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு இந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் கோவிட்-19 ஒழிப்புப் பணிக்காக முதல்வரின் சிறப்பு விருதை முதல்வர் வழங்கினார். விருதைப்பெற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பேட்டியளித்த சௌமியா சாமிநாதன், உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் காணப்படும் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது. உலக அளவில் 200 தடுப்பூசிகளுக்கு மேல் ஆராய்ச்சியில் உள்ளது. நமது நாட்டில் 8 கம்பெனிகள் அதற்கான முயற்சி எடுத்து வருகின்றன. அதற்கு அரசும் உதவி வருகிறது. பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், இலவசமாக தடுப்பூசி கிடைக்கும். அதற்கான நிதி திரட்டலில் அனைவரும் ஈடுபட்டுள்ளனர், என்று கூறியுள்ளார்.