×

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக நீலகிரி, வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்காள கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டதுதடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவலாவில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், பிறையார் எஸ்டேட் பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* ஆகஸ்டு 15(இன்று) மற்றும் 16ம் தேதிகளில், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மத்தய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா, வட ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 17 மற்றும் 18ம் தேதிகளில், தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 19ம் தேதி, தென்மேற்கு மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 16.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 1.5 முல் 2.6 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Tiruvallur ,Vellore ,Nilgiris ,Chennai Meteorological Center , Low pressure area, Tamil Nadu, rain, Chennai Meteorological Center
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு