கவாஸ்கருக்கு பொன்விழா: கொண்டாட எம்சிஏ திட்டம்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் சர்வதேச போட்டிகளில் அறிமுகமான 50வது ஆண்டு நிறைவு   பொன்விழாவை கொண்டாட மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) திட்டமிட்டுள்ளது. மும்பையை சேர்ந்த சுனில் மனோகர் கவாஸ்கர் (71), இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரராக அறிமுகமாக கேப்டனாக உயர்ந்தவர். 10 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற பெருமைக்குரியவர். தொடர்ந்து 4 உலக கோப்பையில் (ஒருநாள்) விளையாடி உள்ளார். இவர் 1971, மார்ச் 6ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் (போர்ட் ஆப் ஸ்பெயின்). கவாஸ்கர் சர்வதேச  போட்டியில் அறிமுகமாகி வரும் மார்ச் மாதத்துடன் 50 ஆண்டுகள் ஆகப் போகிறது. இதை பொன்விழாவாகக் கொண்டாட மும்பை கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

எம்சிஏயின் உயர்நிலை குழு கூட்டம் ஆக.18ம் தேதி நடைபெற உள்ளது. அதில் இது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்திற்கு பிறகு கவாஸ்கரின் பொன்விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பீதி காரணமாக இந்தக் கூட்டம் வழக்கம் போல் ஆன்லைனில் நடைபெறும்.

சர்வதேசப் போட்டிகளில் இருந்து 1987ல் ஓய்வு பெற்ற கவாஸ்கர், 125 டெஸ்டில் விளையாடி 10,122 ரன் குவித்துள்ளார் (34 சதம், 45 அரை சதம், அதிகம் 236). மேலும் 108 ஒருநாள் போட்டிகளில் 3,092 ரன் எடுத்துள்ளார் (ஒரு சதம், 27 அரை சதம், அதிகம் 103*). டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார். ரஞ்சி உள்ளிட்ட முதல் தர போட்டிகளில் 25,834 ரன்னும், லிஸ்ட் ஏ போட்டிகளில் 4,594 ரன் குவித்துள்ளதுடன், முதல் தர போட்டியில் அதிகபட்சமாக 340 ரன் விளாசியுள்ளார்.

Related Stories: