டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில், சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், அமைச்சர் அமித்ஷாவுக்கு இன்று இரண்டாவது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்துள்ளன. எனினும், வீட்டிலேயே சில நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு மருத்துவர்கள் அமித்ஷாவுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று தனக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என்று வந்துள்ளதாகவும், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.