காத்மண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
நேபாளத்தில் பருவமழை தொடங்கிய நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, அந்நாட்டின் த் பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட தொடங்கியது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் மற்றொரு புறம் கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. 8 பேர் காயமடைந்து இருந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது தவிர்த்து சம்பவ பகுதியை சேர்ந்த 38 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை இறுதியில் 113 பேர் பலியாகி இருந்தனர். 67 பேர் காயமடைந்து இருந்தனர். 38 பேரை காணவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.