மகாராஷ்டிரா அரசுப்பள்ளி மாணவர்கள் ஜப்பானிய மொழியைக் கற்று, பேசி அசத்தல்

அவுரங்காபாத்: அயல்நாட்டு மொழியை கற்க முடியும் என்ற ஆர்வத்தில் ஜப்பானிய மொழியைக் கற்று, பேசி மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்துகின்றனர். அவுரங்காபாத் நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள காடிவாத் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள்தான் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை கற்க வேண்டும் என்ற ஆசையில் ஜப்பானிய மொழியையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லை. ஆனால், மகாராஷ்டிரா அரசின் இணையதள வசதிதான் இந்த கிராமத்தின் குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்ற உதவியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி அயல்நாட்டு மொழியைக் கற்கும் திட்டத்தை 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி மாணவர்கள் ஏதேனும் ஒரு அயல்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால் மாணவர்கள் பெரும்பாலானோர் ரோபாட்டிக்ஸ் மீதுள்ள ஆர்வத்தால் ஜப்பானிய மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால் ஜப்பானிய மொழியைக் கற்க முறையான பாடநூல்களும இல்லை, ஆசிரியர்களும் இல்லை. இருப்பினும் யூடியூப் வீடியோக்கள் மூலமும், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மூலம் அங்கிருக்கும் ஆசிரியர்களே ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த செய்தியை அறிந்த அவுரங்காபாத் நகரைச் சேர்ந்தவரும், ஜப்பானிய மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவருமான சுனிய் ஜாக்டியோ என்பவர் ஜப்பானிய மொழியை முறைப்படி இலவசமாக மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முன்வந்தார். இவரின் முயற்சியால் இப்போது மாணவர்கள் ஜப்பானிய மொழியில் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டுள்ளனர். இப்போது பள்ளியில் பயிலும் 350 மாணவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜப்பானிய மொழியில் பேசவும், எழுதவும் செய்கிறார்கள்.

Related Stories: