இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த இறைச்சியில் கொரோனா வைரஸ்: சீனாவில் பதற்றம் அதிகரிப்பு

பீஜிங்: சீனாவின் இரண்டு நகரங்களுக்கு இறக்குமதியில் வந்திறங்கிய பதப்படுத்தப்பட்ட உறைந்த நிலையிலான உணவுப்பொருளில் கொரோனா வைரஸ் இருப்பதாக தகவல்கள் வெளியானது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உறைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சியின் இறக்கைலிருந்து எடுக்கப்பட்ட சாம்பிளில் கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்றும் இந்த இறக்குமதி சீனாவின் ஷென்சென் நகருக்குப் பிரேசிலில் இருந்து வந்ததாகவும், மற்றொரு இறக்குமதியான இறால் உணவில் சீனாவின் ஷியான் நகரில் கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கன் அரோரா என்ற நிறுவனத்துடையது பிரேசிலின் 3வது மிகப்பெரிய கால்நடை மற்றும் பன்றி இறைச்சி ஏற்றுமதி நிறுவனமாகும். இதற்கிடையே கொரோனா இல்லாத நாடாகக் கொண்டாடிய நியூஸிலாந்தில் திடீரென தொற்று ஏற்பட்டதற்கும் இறைச்சி இறக்குமதிக்கும் தொடர்பிருக்கலாம் என்ற ஐயம் எழுந்துள்ளது.

-20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் வைரஸ்கள் 2 ஆண்டுகளுக்கு உயிருடன் இருக்கும். ஆனால் விஞ்ஞானிகள் தற்போது உணவுச்சங்கிலி மூலம் வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். உலகச் சுகாதார அமைப்பின் அவசரநிலை திட்டத் தலைவர் மைக் ரயான், செய்தி நிறுவனம் ஒன்றிற்குக் கூறுகையில், உணவு, உணவு பேக்கேஜ் அல்லது உணவு டெலிவரி ஆகியவை கண்டு பயப்பட வேண்டாம் என்கிறார்.

யுஎஸ்.எஃப்டிஏ மற்றும் வேளாண் துறையினரும் உணவு அல்லது உணவு பேக்கேஜ் வழியாகவெல்லாம் வைரஸ் பரவாது என்று உறுதிபடக் கூறுகின்றனர். பிரேசில் நிறுவனமும் உணவு மூலம் கொரோனா பரவுவதற்கு வாய்ப்பில்லை என்றே கூறுகின்றனர். ஆனால் சிக்கனில் எப்படி கொரோனா பாசிட்டிவ், எந்த கட்டத்தில் வந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இருப்பினும் கடல் உணவு மற்றும் இறக்குமதி இறைச்சிப் பொருளை உட்கொள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு ஷென்சென் மாகாண அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Stories: