சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமம் புதிய கொள்ளிடம் ஆறு மற்றும் பழைய கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையில் தனி தீவாக அமைந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் கடந்த ஆண்டு காவிரியில் உபரி நீர் திறந்து விடப்பட்டபோது இக்கிராமம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஆற்றின் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள் புகும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுப்பணித்துறை அலுவலர்கள் தற்காலிகமாக பனைமரம், மணல் மூட்டை மூலம் தடுப்புகள் அமைத்தனர். தற்போது கர்நாடக மாநிலத்தில் அதிக மழை பெய்வதால் மேட்டூர் அணை நிரம்பி மீண்டும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் உள்ளது. அப்போது இந்த இடத்தில் தடுப்புக் கட்டைகள் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்து கிராமமே மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.