பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் தென்மேற்கு பருவமழை எதிரொலியால் கொப்பரை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னை விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியார், கோட்டூர், கோமங்கலம், நெகமம், கிணத்துக்கடவு, வடக்கிபாளையம், கோபாலபுரம், கஞ்சம்பட்டி, ராமபட்டிணம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தென்னை விவசாயம் அதிகளவில் நடப்பதால் இப்பகுதிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட கொப்பரை உலர்கலன்கள் உள்ளன. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் போது உலர்கலன்களில் தொடர்ந்து கொப்பரை உலர வைக்கும் பணி நடக்கிறது. இந்தாண்டில் கடந்த 6 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், களங்களில் கொப்பரை உலரவைக்கும் பணி தொடர்ந்திருந்தது.