×

வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரைப்பட படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும்!: தமிழக அரசுக்கு பாரதிராஜா கோரிக்கை..!!

சென்னை: வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரைப்பட படப்பிடிப்புகளை நடத்த அனுமதி தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு இயக்குனர் பாரதிராஜா கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 150 நாட்களுக்கும் மேலாக திரைப்பட படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்பட படப்பிடிப்பு மட்டுமின்றி பல்வேறு தொழில்கள் முடங்கியிருக்கின்றன. குறிப்பாக திரையரங்குகள் 150 நாட்களுக்கும் மேலாக மூடியிருக்கின்றன. இதன் காரணமாக திரைப்படங்கள் வெளிவருவதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது. இதனால் 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களும், படப்பிடிப்புகளும் தேங்கி நிற்கின்றன.

தொடர்ந்து, சின்னத்திரை படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. அதேபோல திரைப்பட படப்பிடிப்பையும் மேற்கொள்வதற்காக தமிழக அரசு கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.  இந்நிலையில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக உள்ள பாரதிராஜா அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறார். அதில் வழிகாட்டு நெறிமுறைகளுடன் திரைப்பட படப்பிடிப்பை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வெளியுறுத்தியுள்ளார்.

படப்பிடிப்பு நடத்தாததன் காரணமாக திரைப்பட தொழிலாளர்கள் தங்களுடைய சேமிப்பினை கரைத்துவிட்டதாகவும், தொடர்ந்து பல்வேறு தரப்பினர் பட்டினியோடு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதன் காரணமாக நாளை சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் ஆற்றக்கூடிய உரையில் திரைப்பட படப்பிடிப்புக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், உள்ளேயே படப்பிடிப்பு நடத்துவதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும், வெளிப்புற படப்பிடிப்புகளை தாங்கள் மேற்கொள்ளப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Tags : government ,Film shooting ,Bharathiraja ,Tamil Nadu , Film shooting ,Bharathiraja,e Tamil Nadu government ,
× RELATED பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே...