ஆன்லைன் விளையாட்டு மூலம் கோடிகளை குவித்த கும்பல் : ரூ.1,100 கோடி சட்டவிரோத பணபரிமாற்றம் செய்த சீனர் உட்பட 3 பேர் கைது!!

ஹைதராபாத் : தெலங்கானா மாநிலத்தில் ஆன்லைன் விளையாட்டு மூலம் ரூ.1,100 கோடி பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து செயல்படும் ஆன்லைன் விளையாட்டுகளில் பந்தயம் கட்டி விளையாடுபவர்கள் கோடிக்கணக்கில் பணம் இழப்பதால் தற்கொலை செய்து கொள்வதாக ஹைதராபாத் போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையொட்டி சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்திய தெலுங்கானா போலீசார், சீனாவைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் வங்கி கணக்குகளில் ரூ. 30 கோடியை கண்டறிந்து முடக்கியுள்ளனர்.

டெலிகிராம், வாட்ஸ் அப் மூலம் ஆன்லைன் விளையாடுவதற்கு இளைஞர்களை கவருவதற்காக தனிக் குழுவை அமைத்து செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் நிர்வாகிகள் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியன் ரம்மி போன்ற விளையாட்டுகள் மூலம் இதுவரை ரூ. 1,100 கோடி பணப்பரிமாற்றம் நடைபெற்றது. கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து 3 மடிக்கணினி மற்றும் விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

இது குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் அஞ்சனிக்குமார் கூறுகையில், ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தெலங்கானாவில் ஆன்லைன் விளையாட்டு நடத்தி ஏமாற்றி பணம் பறிக்கின்றனர்.அவர்கள் மீது ஏமாற்றுதல் மற்றும் கிரிமினல் சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படும். என்றார்.

Related Stories: