சென்னை: குழந்தைகளுடன் விமானத்தில் வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தனது உச்சகட்ட பாதிப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், மேலும் வைரஸ் தீவிரமடையாமல் இருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் வந்தே பாரத் திட்டம் மூலமாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும், சர்வதேச கொரோனா பாதிப்பு நிவாரண பணிகளுக்கு இயங்கும் விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாகும், கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆகஸ்ட் 31 ம் ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகே அவர்களது இல்லத்திற்கு அனுப்பப்பட்டு வந்தனர். இந்நிலையில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் சென்னை வரும் விமான பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து சென்னை வரும் விமான பயணிகள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. அதில் உடனடி மருத்துவத் தேவை இருப்பவர்கள், உறவினர்களின் மறைவுக்கு வந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், 75 வயதுக்கு மேலானவர்களுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த அரசாணையில் திருத்தம் செய்து சென்னை வருவதற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் சோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்திருந்தால் அவர்களுக்கும் தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.