மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 25 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள வயநாடு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை தற்போது தணிந்துள்ளதால், கபினி மற்றும் கே.ஆர் எஸ். அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டிருந்த உபரி நீரின் அளவும் குறைக்கப்பட்டது.
இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர் வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில், நேற்று காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக இன்று மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 15 ஆயிரம் கன அடியாக வந்துகொண்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு சுமார் 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து நீர்வரத்து காரணமாக நேற்று காலை 97.42 கன அடியாக இருந்த நீர் மட்டம், இன்று காலை நிலவரப்படி, சுமார் 98.59 கன அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் 1. 17 கன அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தால் மேட்டூர் அணையின் நீர் வரத்து சுமார் 100 கன அடியை எட்ட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.