செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த கஜாபுலிபேட்டையை சேர்ந்தவர் யோவான். இவரது மகன் ஸ்டான்லி (10). செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முந்தினம் இரவு ஸ்டான்லி, அவனது தாத்தா ஞானசேகருடன் மொபட்டில் அஞ்சூர் நோக்கி சென்றனர். வீராபுரம் மகேந்திரா சிட்டி அருகே சென்றபோது, எதிரே வேகமாக வந்த தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து செல்லும் பஸ், மொபட் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஸ்டான்லி, அதே பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே இறந்தான். தாத்தா ஞானசேகரன், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். புகாரின்படி செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* மறைமலைநகர் அடுத்த பெரம்மநல்லூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் நித்யா (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் வெளியான 10ம் வகுப்பு பொது தேர்வில், நித்யா குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் அவரை, பெற்றோர் திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த நித்யா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின்படி மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் முருகன் (38). டிரைவர். கொரோனா ஊரடங்கால் தொழில் பாதிக்கப்பட்டு இறால், மீன்களை வாங்கி விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை முருகன் வியாபாரத்துக்கு புறப்பட்டார். கல்பாக்கம் அருகே வாயலூர், இசிஆர் சாலையில் சென்றபோது, புதுவையில் இருந்து சென்னை நோக்கி வந்த கார், முருகன் மீது பயங்கரமாக மோதியது. இதில், படுகாயமடைந்த அவர், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
* திருக்கழுக்குன்றம், மேட்டுமங்கலத்தை சேர்ந்தவர் வேணுகோபால் (56). டெய்லர். நேற்று முன்தினம் இரவு வேணுகோபால், திருக்கழுக்கழுக்குன்றம் - கல்பாக்கம் சாலையில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில், வேணுகோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.