சுதந்திர தினவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நாளை சுதந்திர தினவிழா நடைபெறுவதை முன்னிட்டு, காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, உழைப்பாளர் சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை உள்ள காமராஜர் சாலை, போர் நினைவு சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை உள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படும்.

* காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்தடையலாம்.

* பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

* அண்ணாசாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமிசாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை  பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம்.

* முத்துசாமி சாலையில் இருந்து கொடிமர சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.

* சிவப்பு மற்றும் ஊதா வண்ண வாகன அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணி வரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச் செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்தவேண்டும். இதே அடையாள அட்டை வைத்திருப்போர் காலை 8.45 மணிக்கு பின் வந்தால் கொடிமர சாலை, ஜார்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.

* நீல மற்றும் இளஞ்சிவப்பு வண்ண வாகன அட்டை வைத்திருப்போர் கொடிமரச் சாலை, ஜார்ஜ் கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை பாரிமுனை சந்திப்பு, ரிசர்வ் வங்கி சுரங்கப்பதை வழியாகவோ சென்று தலைமைச்செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிர்புறம் உள்ள பிடபிள்யூடி வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

* அனுமதி அட்டை இல்லாமல் வாகனங்களில் வருவோர் போர் நினைவுச் சின்னம் அருகே இறங்கிகொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும். இவ்வாறு போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Stories: