சேலம்: பாஜ என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது. ஒருபோதும் மீண்டு வர முடியாது என்று சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கொரோனா பாதிப்பிற்குள்ளாக மத்திய பாஜ அரசு தான் முழு காரணம். இந்த இக்கட்டான நிலையில், நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் தேசிய கல்விக்கொள்கை, மின்சார திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை அவசர சட்டங்களாக கொண்டு வந்து, அமல்படுத்துகிறார்கள்.
தமிழகத்திலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக மருந்து, மாத்திரைகள் மற்றும் கண்டறியும் கருவிகள் வாங்குவதில் ஊழல் செய்கிறார்கள். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கைக்கு எதிராக உடனே சட்டமன்றத்தை கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் பாஜ, கால் ஊன்ற சாதி, மத கலவரங்களையும், கடவுள் பெயரையும் பயன்படுத்துகின்றனர். கேடி, ரவுடிகளை கட்சியில் சேர்க்கின்றனர். இதர கட்சிகளை பலமிழக்க செய்யும் முயற்சியிலும், பாஜ ஈடுபடுகிறது. பாஜவுடன் சேரும் கட்சிகளை மக்கள் நிராகரிப்பார்கள். பாஜ என்னும் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக அதிமுக இருக்கிறது.
அதனால் இனி பாம்பின் வாயில் இருந்து ஒருபோதும் மீண்டு வர முடியாது. வரும் 15ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுவார். அடுத்த ஆகஸ்ட் 15ம் தேதி கோட்டையி அவர் கொடி ஏற்ற மாட்டார். திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, கொள்கை ரீதியிலானது. எங்கள் முதல்வர் வேட்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 2 ஆண்டுக்கு முன்பே அறிவித்து விட்டோம். எங்கள் கூட்டணி பலமாக இருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறும். புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வருவது பற்றி திமுக தலைவர் முடிவு செய்வார். இவ்வாறு முத்தரசன் கூறினார்.