சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் குணமடைந்து பணிக்கு திரும்பினார். இதைப்போன்று 30க்கு மேற்பட்ட பொறியாளர்களும் மீண்டும் பணிக்கு திரும்பினர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது வரை 500க்கு மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300க்கு மேற்பட்ட பணியாளர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பி விட்டனர். இதில் குறிப்பாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குணமடைந்து பணிக்கு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் கடந்த வாரம் சென்னை மாநகராட்சியில் 35க்கு மேற்பட்ட பொறியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் பொதுத்துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார் மற்றும் அவரது மனைவி லட்சுமி ஆகியோருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்றில் குணமடைந்த தலைமை பொறியாளர் நந்தக்குமார் மீண்டும் பணிக்கு திரும்பினார். இவரை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதை்போன்று 30க்கு மேற்பட்ட பொறியாளர்களுக்கு குணமடைந்து பணிக்கு திரும்பினர்.