சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் குணமடைந்து பணிக்கு திரும்பினார். இதைப்போன்று 30க்கு மேற்பட்ட பொறியாளர்களும் மீண்டும் பணிக்கு திரும்பினர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்கள பணியாளர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி தற்போது வரை 500க்கு மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300க்கு மேற்பட்ட பணியாளர்கள் குணமடைந்து பணிக்கு திரும்பி விட்டனர். இதில் குறிப்பாக சென்னை மாநகராட்சி துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் குணமடைந்து பணிக்கு திரும்பிவிட்டனர்.