புதுடெல்லி ‘அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 3.04 கோடி முகக்கவகம் மற்றும் பாதுகாப்பு கவச உடைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது,’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த மார்ச் 11ம் தேதி முதல் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அரசின் மையங்களுக்கு இலவசமாக 3.04 கோடி என்-95 முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1.28 கோடி பாதுகாப்பு கவச உடைகள் விநியோகிக்கப்பட்டு உள்ளன. இது மட்டுமின்றி, 10.83 கோடி ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட 22,533 வென்டிலேட்டர்களும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* ரெம்டெசிவிர் மருந்து ரூ.2,800க்கு அறிமுகம்
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும், ‘ரெம்டெசிவிர்’ மருந்து, இந்தியாவில் 100 மிகி ரூ.2,800 என்ற விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதை இந்த மருந்தை தயாரிக்கும் சைடஸ் காடில்லா அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இதன் பெயரை ‘ரெம்டாக்’ என்று மாற்றி வெளியிட்டுள்ளது. கொரோனா சிகிச்சை அளிக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு இவை எளிதாக கிடைக்கும். இந்த மருந்து இதற்கு முன் ரூ.4,000 வரை விற்கப்பட்டது.