பொதுமக்கள் அதிர்ச்சி; ஏடிஎம் மையத்தில் உடைந்த நிலையில் கதவு: அதிகாரிகள் கவனிப்பார்களா?

திருமங்கலம்: திருமங்கலத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் கண்ணாடி கதவு உடைந்த நிலையில் கடந்த சில தினங்களாக இயங்கி வருவது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமங்கலம் கற்பகம் நகரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயங்கி வருகிறது. நகரில் வளர்ந்து வரும் பகுதியான கற்பகம்நகர், காமராஜபுரம், ஆறுமுகம்ரோடு, சோணைமீனா நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் நலனுக்காக இந்த பகுதியில் ஏடிஎம் மையம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக ஏடிஎம் மையத்தின் கண்ணாடி கதவின் ஒருபக்கம் கண்ணாடி உடைந்த நிலையில் இந்த மையம் இயங்கி வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். திறந்திருந்த கதவுகள் வழியாக நாய்கள் சென்று இரவு நேரத்தில் ஓய்வெடுப்பதும் அதிகரித்துள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில்,‘‘கண்ணாடி எப்படி உடைந்தது என தெரியவில்லை. ஆனால் உடைந்த கண்ணாடியுடன் ஏடிஎம் மையம் தொடர்ந்து செயல்படுகிறது. ஏற்கனவே ஏடிஎம் மையங்களில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் கதவின் கீழ்புறம் உடைந்த நிலையில் கற்பகம்நகரில் ஏடிஎம் மையம் செயல்படுவது வேதனை அளிக்கிறது. இந்த மையத்திற்கு காவலாளி கூட இல்லை. கண்காணிப்பு கேமிரா உள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’என்றனர்.

Related Stories: