வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் :அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் நம்பிக்கை!!

மதுரை : வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், மதுரையில் 300 ஆண்டுகளாக செய்ய முடியாத வளர்ச்சி திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிமுக அரசு செய்த திட்டங்களை முன்வைத்து தேர்தலில் மக்களை சந்திப்போம்.அதிமுகவின் சாதனையை சொன்னாலே மக்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.மக்கள் அதிமுகவிற்கு ஹாட்ரிக் வெற்றியை தருவார்கள். ஜெயலலிதா இருந்தபோது அரசின் திட்டங்களை மக்களிடம் எளிமையாக கொண்டு செல்ல முடிந்தது. ஆனால் தற்போது சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல்வேறு சவால்கள் உள்ளது, என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,  பாஜகவின் வி.பி.துரைசாமி பாரதிய ஜனதா தலைமையில்தான் கூட்டணி எனக் கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவரவர் இருக்கும் கட்சியை குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்காக வி.பி. துரைசாமி அவ்வாறு சொல்லியிருக்கலாம். தேர்தல் வியூகம், கூட்டணி வியூகம் என்பதும் யார் தலைமையில் கூட்டணி அமைப்பது என்பது குறித்தும் அதிமுக கட்சியின் தலைமை ஒன்று கூடி முடிவெடுக்கும். பொது வெளியில் விவாதிப்பது என்பது ஆக்கப்பூர்வமானதாக இருக்காது.கூட்டணி தொடர்வதாக பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் எல்.முருகன் தெளிவாக தெரிவித்துள்ளார். ஒரு கட்சியின் கருத்து என்பது கட்சியின் தலைமை உச்சரிப்பதை அடிப்படையாக கொண்டதாக மட்டுமே இருக்கும். மற்றவர்கள் சொல்லும் கருத்து சபைக்கு உதவாத கருதாகவே இருக்கும், என்றார்.

Related Stories: