டெல்லி: இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஆனால் தற்போது கொரோனா தொற்று முன்பை விட பலமடங்கு அதிகரித்து கொண்டு வருகிறது. நாள்தோறும் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி வந்தது. மேலும் இந்த உச்சக்கட்ட கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. நாட்டில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.
இதனையடுத்து, இந்தியாவில் அதிகபட்சமாக கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23.96 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 6,53,622 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 16,95,982 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 70.76% ஆக உயர்வடைந்து உள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.