மதுரை: திருச்சியில் 2 வாரங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா வேகம் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் வழக்கறிஞர் ராஜகோபால் என்பவர் திருச்சியில் கொரோனா வேகம் அதிகரித்து வருவதால் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதுகுறித்த அவர் தாக்கல் செய்த மனுவில், திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தொற்று பாதித்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.