கூடலூர்: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உலக யானைகள் தினத்தை ஒட்டி ஆசிய யானைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. புலிகள் காப்பக இணை இயக்குனர் செண்பக பிரியா தலைமையில் உதவி வன பாதுகாவலர் (பயிற்சி)கார் விக் கங்குவார் முன்னிலையில் தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், யானைகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. வனத்துறை ஊழியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வனத்துறை ஊழியர்களால் வனப் பகுதியில் காணப்படும் களைச்செடியான லண்டானா செடிகளை கொண்டு உருவாக்கப்பட்ட யானையின் மாதிரி இங்குள்ள அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து பெங்களூரைச் சேர்ந்த யானைகள் ஆய்வாளர் நச்சு கேத்தன் ஆசிய யானைகள் குறித்து வனத்துறை ஊழியர்கள் பணியாளர்களுக்கு விளக்கங்கள் அளித்தார். நிகழ்ச்சியில் வனச்சரகர்கள் தயானந்த், ராஜேந்திரன், சிவகுமார், விஜய், சுரேஷ் மற்றும் வனவர்கள் மற்றும் வனப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.