சென்னை: ஆவடி ராணுவ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட குண்டு துளைக்காத கவச உடைகள் தமிழக காவல்துறையிடம் வழங்கப்பட்டது. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டிலியே பல்வேறு பொருட்களை தயாரிக்கும் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இந்நிலையில் தமிழக காவல் துறைக்கு தேவையான குண்டு துளைக்காத கவச உடைகள் தயாரிக்கும் பணி ஆவடி ராணுவ ஆடை தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது. இதன்படி தயாரிக்கப்பட்ட கவச உடைகளை தமிழக காவல் துறையிடம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் ஆவடி ராணுவ ஆடை தொழிற்சாலையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆவடி தொழிற்சாலை பொது மேலாளர் சுர்ஜித் தாஸ், தமிழக கூடுதல் டிஜிபி சீமா அகர்வாலிடம் கவச உடைகளை ஒப்படைத்தார். இதில் சிஆர்பிஎப் ஐஜி சோனல் வி மிஸ்ரா, தமிழக காவல் துறை டிஐஜி செந்தில் குமாரி, ஏஐஜி சியமாளா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயத்த ஆடை தயாரிப்பு தொழிற்சாலை தலைமை இயக்குனர் ஹரி மோகன், கூடுதல் தலைமை இயக்குனர் விஷ்வகர்மா, உறுப்பினர் ராஜ்னேஷ் டால்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர்.