×

செங்கல்பட்டு - திருப்போரூர் கூட்ரோட்டில் புதிய புறக்காவல் நிலையம் திறப்பு: எஸ்பி திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு - திருப்போரூர் கூட்ரோட்டில், புதிய புறக்காவல் நிலையத்தை எஸ்பி கண்ணன் திறந்து வைத்தார். செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதி திருப்போரூர் கூட்டுசாலையில் வல்லம், சாந்தி நகர், நெம்மேலி, மலாலி நத்தம், ஆலப்பாக்கம் உள்பட பல பகுதிகள் உள்ளன. இங்கு 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. திருப்போரூர், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சாலைகள் இந்த பகுதியில் சந்திப்பதால் இப்பகுதி முக்கிய திருப்போரூர் கூட்டுரோடாக உள்ளது. இங்கு அடிக்கடி சாலை விபத்துகள், சம்பவங்கள், வீட்டை உடைத்து கொள்ளை உள்பட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இதனால், இங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையொட்டி அதிகாரிகள், இந்த பகுதியில் நடக்கும் குற்றங்களை தடுக்க புறக்காவல் நிலையம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையம் திருப்பு விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு எஸ்பிகண்ணன், புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர், எஸ்பி கண்ணன் கூறுகையில், இங்கு, 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனர்.செங்கல்பட்டு ராட்டிண கிணறு ரயில்வே மேம்பாலத்தில் இருந்து மெலேரிபாக்கம் வரை 16 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இதன்மூலம் குற்றச் சம்பவங்கள் குறையும். பொதுமக்கள் புறக்காவல் நிலையத்தில் உள்ள காவலர்களிடம், தங்களின் குறைகளை புகாராக தெரிவிக்கலாம் என்றார். இதில், செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், எஸ்ஐ மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

* எஸ்பிக்கு வரவேற்பு
செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர், காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்த நேரத்தில், பொறுப்பு எஸ்பியாக பாஸ்கரன் செயல்பட்டார். இந்நிலையில், சிகிச்சை முடிந்து எஸ்பி கண்ணன் நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். அவருக்கு மாவட்ட போலீசார், பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.

Tags : Chengalpattu - Opening ,SP ,outpost ,Thiruporur Kudrot , Chengalpattu - Thiruporur, Kudrottil, New Outpost, Opening, SP
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...