சீனாவுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட லூ சாங் ஹவாலா பண பரிவர்த்தனையில் மீண்டும் கைது

டெல்லி: சீனாவுக்காக உளவு பார்த்ததாக ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட லூ சாங்கை பண மோசடி மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக டெல்லி போலீஸ் மீண்டும் கைது செய்துள்ளது. லூ சாங் இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக மிஸோரம் மாநிலம்  லுங்லெய் இடத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் . சார்லி பெங் என்ற பெயரில் இந்தியாவுக்குள் நுழைந்த அவரை ஏற்கெனவே உளவு பார்த்தாக 2018- ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது . ஆனால் இந்த குற்றச்சாட்டில் இருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது.

இந்நிலையில் டெல்லியில் போலியாக செயல்பட்டு வந்த சீன நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி மட்டுமல்லாமல் காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது . அப்போது, ரூ. 300 கோடி அளவுக்கு ஹவாலா பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு வங்கி ஊழியர்கள் உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் லூ சாங்குக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததையடுத்து, அவரை டெல்லி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். அவரிடத்தில் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவையும் இருந்தன.

மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய அதிகாரிகள் கூறுகையில் லூ சாங் 8 முதல் 10 வங்கிக்கணக்குகள் போலி சீன நிறுவனங்களின் பெயரில் தொடங்கியுள்ளார். போலி சீன நிறுவனங்கள் பெயரில் ரூ.300 கோடிக்கு ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளார். பந்தன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஊழியர்களின் உதவியுடன் தினமும் ரூ. 3 கோடி பணம் ஹவாலாவில் புழங்கியுள்ளது. அவரின் பெயரிலேயே 40 வங்கிக்கணக்குகள் உள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: