கடலூர் அருகே கலையூர் ஊராட்சியில் மாணவர்களை அச்சுறுத்திய வகுப்பறைகள் அகற்றம்: ரூ5 லட்சத்தில் புதிய பள்ளி கட்டிடம் உருவாகிறது

கடலூர்: கடலூர் ஒன்றியம் கலையூர் ஊராட்சியில் மாணவர்களை அச்சுறுத்திய பழமை வாய்ந்த பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டு ரூ. 5 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கிராம மக்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலையூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 300 மாணவ, மாணவிகள் கலையூர் இரண்டாயிரம் விளாகம், திருபணம்பாக்கம் உள்ளிட்ட கிராம பகுதியில் இருந்து இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இங்குள்ள வகுப்பறைகள் சில பழமை வாய்ந்த நிலையில் இடிந்து விழும் தருவாயில் இருந்தது.

இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர் புதிய வகுப்பறைகள் கட்டித்தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து பைாய வகுப்பறை கட்டிடங்கள் இடிக்கப்பட்டு ரூ. 5 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் கலையூர் நடுநிலைப்பள்ளியின் பழமை வாய்ந்த வகுப்பறைகள் இடிக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் பள்ளி திறப்பதற்கு முன்பு புதிய கட்டிடப் பணியை முடித்துதர வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: